Friday, May 15, 2026

நீளும் வேலை நேரம்

நீளும்  வேலை நேரம்

               - சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்

கைப் பேசியில் ஒலித்துக் கொண்டிருந்த யாழினிக்குப் பிடித்த திரை இசைப் பாடல்கள் நின்று நினைவூட்டல் இசை ஒலித்தது. காலை மணி ஐந்து. யாழினி அதனை நிறுத்தியதும் திரையிசை தொடர்ந்தது.

அவள் துயிலெழுந்து, ஓய்வறை அவசியங்கள் முடித்து சமயலறையில் வேலைகளை தொடங்கிவிட்டாள். அடுப்பில் தேநீர் கொதித்துக் கொண்டிருந்தது. வடிகட்டி அருந்தி விட்டு அத்தைக்கும் தந்துவிட்டு காலை உணவு சமைக்க தொடங்க வேண்டும். மகளை எழுப்பி பள்ளிக்கு தயார் செய்யணும். 

நேரத்தே வேலைகளை முடிப்பது அவளுக்கு கை வந்த கலை. எதையும் அலுப்பாக கருதாமல், விருப்பத்துடன் செய்வது அவளின் நேர மேலாண்மையை எளிதாக்குகிறது. கணவனின் கனிவான புரிதலும் மகளின் இயல்பான கூர் மதியும் மூவருக்குமிடையேயான இணக்கத்தை மேம்படுத்துகிறது. அத்தையின் வார்த்தைகளில் தலை முறை இடைவெளி தோன்றி மறையும். இவள் மனதிலும் தங்காது.  கணவனுக்கு ரயில்வேயில் இன்ஜின் ஓட்டுனர் பணி. பல நூறு பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ற வகையில் பணியாற்றுபவர். அதற்கு அனுசரணையாக இருக்க வேண்டியதன் அவசியம் அவளுக்கு தெரியும். கணவன், மகள், அத்தை மூவரின் தேவைகளோடு தன் தேவைகளையும் கவனித்துக் கொண்டு வேலைக்கு போக வேண்டும். அலுவலகத்திலும் நேர்த்தியாக வேலை செய்வாள். இவையனைத்தையும் அமைதியாக செய்தாலும் அவளுக்கு பரபரப்பான நேரம் கணவன் பணியிலிருந்து திரும்பும் நேரம்தான். குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல் அது மாறிக் கொண்டே இருக்கும். எல்லாவற்றிற்கும் பழகிப் போனாள்.

மணி எட்டு ஆகிவிட்டது. மகளை குளிக்க வைத்து உடை அணிவித்து உணவு தந்து மதியவுணவுடன் பள்ளிக்கு அனுப்பியாகி விட்டது. அத்தைக்கும் காலை உணவு தந்தாகிவிட்டது. மதிய உணவு, மருந்து, குடுவையில் வெந்நீர் தனியாக மேஜையில் வைத்துவிட்டாள். தானும் குளித்து முடித்து காலை உணவும் சாப்பிட்டு விட்டாள். 

கணவனுக்கு காலை மற்றும் மதிய உணவு தனித்தனியே வைத்தாகிவிட்டது.  குளியலறையில் வெப்பம் வெளியேற்றி, உடல் துவட்ட துண்டு எடுத்து வைத்துவிட்டாள். படுக்கை விரிப்பை சரி செய்து தலையணை போர்வைகளை  வைத்து விட்டாள். வீட்டு உடுப்பை களைந்து அலுவலக உடையணிந்து கைப்பையில் மதிய உணவு, சாவி, கைப்பேசி எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட தயாரானாள்.

வாசலில் ஸ்கூட்டர் வந்து நின்ற ஒலி கேட்டது. கணவன் வேலை முடிந்து வந்துவிட்டான். யாழினி சற்று பரபரப்பானாள். அவன் உள்ளே வர காத்திருந்தாள். கவனமாக அவன் கண்களைப் பார்த்தாள். களைப்புற்றிருந்த பார்வையினூடே அவன் தேவையை படிக்க முயன்றாள். தனியாக சந்தித்துக் கொண்டே சில நாட்களாகி விட்டன. இன்னும் சந்திக்காமல் செல்வது இயலுமா என்று தடுமாறினாள். இன்றாவது நிறைவாக தூங்க முடியுமா என்று அவன் கண்கள் ஏங்கியதை கவனித்து விட்டாள். அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. விவஸ்தை கெட்டவள் என்று வார்த்தைகளை உதிர்க்க தயாராகிக் கொண்டிருந்த அத்தையின் பக்கம் திரும்பாமல் அறைக்குள் சென்று அலுவலக உடையை களைந்து வீட்டு உடைக்கு மாறினாள்.

(ரயில்வே ஊழியர் குடும்ப சந்திப்பில் நடந்த வேதனை பகிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதை புனையப்பட்டுள்ளது.)

Book Day இணைய இதழில் அதே தினத்தன்று வெளியானது

Chetput Panchapkesan Ravisankar

Wednesday, November 9, 2022

தோழனென்று சொல்லடா

தோழனென்று சொல்லடா

தோள்கள் கொட்டி செல்லடா

வர்க உணர்வு கொள்ளடா

தோல்வி நமக்கு ஏதடா 


மீண்டும் மீண்டும் வீழ்ந்த போதும்

எழுந்து நின்றிருக்கிறோம்

இயக்கவியலை கற்றறிந்து 

தெளிவு கண்டிருக்கிறோம்


இடர்கள் வந்த போதிலும்

துச்சமென்றிருக்கிறோம்

போராட்ட பாதையிலே 

வீறுகொண்டு செல்கிறோம்


தடியடியும் ரவை குண்டும்

நெஞ்சில் ஏந்தி நிற்கிறோம்

குண்டர் போலிஸ் ராணுவமும்

தோற்றதுதான் சரித்திரம்



சோஷலிஸ சமுதாயம் 

எங்களது லட்சியம்

சமத்துவ சமுதாயம் 

நிச்சயம் நிச்சயம்

Thursday, October 7, 2021

எப்போதிலிருந்து கம்யூனிஸ்டு

 *இன்னும் இரு மாதங்களில் கட்சியில் இணைந்து ஐம்பது வருடங்கள் முடிந்து விடும்.*


*உறுப்பினராக ஐம்பது வருடங்கள் என்றாலும் கட்சியுடன் ஆன பிணைப்பு எப்போதிலிருந்து?*


*நான் ஒன்பது வயது சிறுவனாக தொடர்பிலிருந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் கம்யூனிஸ் கட்சி. பெரிய வடிவத்தில் உயர் ரக தாளில் மனம் கவரும் வண்ண புகைப் படங்களுடன் மகிழ்ச்சியூட்டும் தஙவல்களுடன் வந்து கொண்டிருந்த சோவியத் லேண்ட் பத்திரிக்கையின் மூலம்... மனிதன் விண்வெளியில் உலகை வலம் வந்த செய்திகளை ஆர்வமுடன் படிப்பேன். என் வகுப்பு குழுவுக்கு பெயர் வைக்க ஆலோசனை கேட்ட போது யூரி காகரின், வாலண்டினா தெரஸ்கோவா என் று முதல் விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனையின் பெயரைச் சொன்னேன். வகுப்பாசிரியரின் புருவம் உயர்ந்தது.* 


*சோவியத் லாண்டில் வரும் பாலே நடனம், இசை நிகழ்ச்சிகளைத் பற்றிய செய்திகளை நான் விரும்பிப் படிப்பேன். உஸ்பெக்கிஸ்தான் இளம் பெண் ஒருவள் பாவனையோடு பாடும் படம் ஒன்று வெளியாகியிருந்தது. ஒரு இளைஞன் பின்னால் நின்று கொண்டு புல்லாங் குழல் வாசித்துக் கொண்டிருந்தான். அந்தப் படம் என்னை வெகுவாக கவர்ந்தது. பத்து பதினைந்து வருடங்கள் அந்த புகைப்படத்தை பாதுகாப்பாக வைத்திருந்தேன். அவ்வப்போது பார்ப்பேன். ஒரு உஸ்பெக்கிஸ்தான் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூட எண்ணியதுண்டு. புல்லாங்குழல் கூட வாசித்து பழகினேன்.*


*பன்னிரண்டு வயதில் வீட்டருகில் குடிசைத் தொழிலாக நடைபெறும் பீடி சுற்றும் கூடத்தில் அமர்ந்து ஜனசக்தி படித்துக் காட்டுவேன். தலைப்புச் செய்திகளையும் அறிமுக பாராக்களையும் முதலில் படிப்பேன். பின்னர் நேயர் விருப்பம் போல தொழிலாளர்கள் கேட்கும் செய்திகளை படிப்பேன். பள்ளியிலிருந்து வரும்போதே அழைப்பார்கள். தினமும் குறைந்தது அரை மணி நேரம்  படித்துக் காட்டுவேன். இது இந்திய கம்யூனிஸ்டு கட்சியினுடனான தொடர்பின் ஆரம்பம்.*


*முதல் கட்சி நடவடிக்கை எப்போது?.*


*1962ல் என்னுடைய பதி மூன்றாவது வயதில் கம்யூனிஸ்டு கட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சிறுவர்களை சேர்த்துக் கொண்டு, யாருக்கையா ஓட்டு என்று மூன்று நான்கு வீதிகளில் வலம் வந்ததுதான் முதல் கட்சி நடவடிக்கை. பீடித் தொழிலாளர்கள் உடனிருந்து உற்சாகப்படுத்தினர். பாராளுமன்ற அபேட்சகர் ராஜரத்தினம் எம் ஏ பி எல் லுக்கும் சட்ட சபை அபேட்சகர் கே ஆர் சுந்தரத்துக்கும் கதிர் அரிவாள் சின்னத்தில் மறவாமல் ஓட்டுப் போடுங்கள் என்று பேசியதுதான் முதல் அரசியல் உரை.*


*பின்னர் கல்லூரி படிக்கும்போது தீக்கதிர் வார இதழ் விநியோகமப் பணி முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடவடிக்கை. நான் விநியோகித்து தீக்கதிர் வாசித்தவர்கள் சைதாப் பேட்டையில் தோழர் வி என் ராகவன் (தபால் துறையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏழு வருடங்கள் தீக்கதிரில் பணி புரிந்தவர்), ஓல்டு டவுனில் தோழர் கங்காதரன் (அப்போது ரெவின்யூ துறையின் தொழிற்சங்கம், பின்னர் அரசு ஊழியர் சங்கம்), சாயிநாதபுரத்தில் தோழர் ஜெகதீசன் ஏஐஐஇஏ. இந்த எட்டு கிலோ மீட்டர் வழிப் பாதையில் பத்து பதினைந்து தோழர்களுக்கும் விநியோகம்.*

Sunday, October 3, 2021

ஸ்டேட் பேங்க் தொழிற்சங்கத்தில்...

 *நான் ஸ்டேட் பேங்கில் கமுக்கமாக இருந்தேனா?*


*"நீ வேலை செய்யுமிடத்தில் நீ சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடாமல் என்ன வர்க்கம் போராட்டம் நடத்தப் போகிறாய்?" தொழில் புரியும் வங்கிக் கட்சிக் கிளையில் உறுப்பினராக இல்லாமல் வசிக்குமிடத்தில் கட்சி உறுப்பினர்களாக செயலாற்றுபவர்களைப் பற்றி குறிப்பிட்டு தோழர் பி டி ரணதிவே கேட்பார்.*


*1969, முதல் இருதரப்பு ஒப்பந்தம் காலத்தில் வங்கிப் பணியில் சேர்ந்தேன். 1/1/1970 முதல் இரண்டாம் இருதரப்பு ஒப்பந்தம். இதனை விளக்கி வெற்றி கூட்டமாக நான் படித்த கல்லூரி கேலரி அறையில் SBSU கூட்டம். மாசிலாமணி தான் அப்போது பொதுச் செயலாளர். Area abolitionல் மூன்றாவது ஏரியாவுக்கு நியாயம் மறுக்கப்பட்டள்ளதை பற்றி கேட்டேன். "ஒரு வருடம் கூட சர்வீஸ் இல்ல. இவ்வளவு பேருக்கு எழாத கேள்வி உங்களுக்கு எப்படி?" என்று பதில்.* 


*ஸ்டேட் பேங்கில் probationக்கு பிறகு மூன்று வருட சர்வீஸ் முடிந்தால் வீட்டுக் கடன் உண்டு. ஆனால் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலமாகத்தான். அதற்கான வேலைகளை தொடங்க முயற்சித்தேன். அதுமட்டுமில்லாமல் கிளைத் தேர்தலில் நானும் இன்னொரு கேஷியரும் வேட்பு மனு தாக்கல் செய்தோம்.வேலூரில் சிஎம்சி எதிரில் துவங்க இருந்த கிளைக்கு நாங்கள் இருவரும் மாற்றப் பட்டதாக கடிதம் தரப்பட்டு, ஆகவே எங்களின் வேட்பு மனு ரத்தாகி விட்டதாக அறிவிப்பு பலகை கூறியது. அந்த கிளைக்கென்று  வெளி ஊரிலிருந்து இருவர் எங்கள் கிளையில் காத்திருப்பில் இருப்பதை சுட்டிக் காட்டி கேட்டதுதான் மிச்சம். ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை என்ற அதிகாரப்பூர்வமற்ற ஏற்பாடு ஒன்று நடைமுறையில் இருந்ததால் உடன் பணி புரிவோர் தங்கள் இயலாமையை எங்களை கேலி செய்வதன் மூலம் திரையிட்டுக் கொண்டனர்.*

நகர தொழிற்சங்க பணிகளில்

 *தோழர் பரமசிவம் என் அப்பாவால் கவரப்பட்டு அற்பணிப்போடு இயக்கப் பணியாற்றும் தோழர். தொலை பேசி துறை. அவர்  எல்லோரையும் பிரதர் என்று அழைத்ததால் அவருக்கு அதுவே செல்லப் பெயராகிவிட்டது.*


*தோழர் K G Bose என்ன சொன்னார் என்ற உரையாடலோடு தொடங்கி என்னை நகர தொழிற்சங்க பணிகளில் ஈடுபடுத்திவிட்டார். மே தினம், Central State Public Sector Convention, City Trade Union Council என்று அனைத்திலும் நடை பெறும் நிகழ்வுகளுக்கான தயாரிப்புக் கூட்டத்தில் அமர்ந்து முடிவுகளை குறிப்பெடுப்பது, ஹால், மைக், அழைப்பிதழ், போஸ்டர்,நினைவூட்டல், வரைவு தீர்மானம் என்று அனைத்து பணிகளிலும் என்னை ஈடுபடுத்தி விடுவார்.*


*என்னுடன் படித்த நண்பர்களில் கணிசமான எண்ணிக்கையினர் பட்டதாரி ஆசிரியர்கள். அவர்களில் சிலர் சங்க நிர்வாகிகள். அவர்களின் தொழிற்சங்கம் போராட்ட அறை கூவல் விடுத்தது. ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டங்களில் நகரின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் வாழ்த்தி பேச ஏற்பாடு செய்ய உதவியாய் இருந்தேன். கோஷம் எழுப்ப, வீதியில் இறங்கி போராட அவர்களுக்கு இருந்த தயக்கத்தை உடைத்தேன்.*


*ஒரு நாள் ஒரு சிஐடி போலீஸ் காசோலைக்கு பணம் பெற வங்கிக்கு வந்திருந்தார். என்னை கேஷ் கவுண்டரில் பார்த்துவிட்டு வியப் படைந்தார். "நீங்க கம்யூனிஸ்டுன்னு தெரியும். சிஎம்சியில் வேலை பார்ப்பவர் என நினைத்தேன். பின்னர் எல்ஐசி ஊழியர் என நினைத்தேன். பின்னர் ரெயில்வே, தொலை பேசி ஊழியர் அல்லது ஆசிரியர் என் எண்ணினேன். பார்த்தால் ஸ்டேட் பேங்குல கமுக்கமாக உக்காந்து கிட்டு இருக்கீங்க" என்று வியப்புடன் கேட்டார்*

Tuesday, September 28, 2021

ம் நான்காவது வால்யூம்

 *2012ல் சமூக விஞ்ஞான கழகம் ஏற்பாடு செய்திருந்த மூலதனம் வாசிப்பு நிகழ்ச்சியை பேராசிரியர் பிரபாத் பட்நாயக் துவக்கி வைத்தார். அந்த குழுவில் நானும் பங்கேற்று வாரந்தோரும் கூடி மூலதனம் படித்து விவாதித்தோம். பார்க்க http://marxinmooladhanam.blogspot.com. 2016ல் மூன்று வால்யூம்களும் படித்து முடித்தோம். நான்காவது வால்யூமை  தேடினேன்.  கிடைக்கவில்லை. உபரி மதிப்பு பற்றிய, மூன்று புத்தக பிரிவுகளாக உள்ள அந்த நான்காவது வால்யூம்  இப்போது என் புத்தக அலமாரியில். எப்படி வந்தது?*.


*தோழர் சிசுதோஷ் லஹிரி கௌஹாத்தியில் தொலைபேசி துறையில் பொறியாளர். 1974ல் சிறு நீரகம் செயலிழந்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சி எம் சி வந்தார். தோழர் மோனி போஸ் என் அப்பாவுக்கு எழுதிய கடிதம் கொண்டு வந்திருந்தார். அப்பா மாற்றலாகி வெளி ஊரில் இருந்தார். லஹிரியுடன் தாயார் மற்றும் சகோதரன் வந்திருந்தனர். மனைவியும் கைக் குழந்தையும் சில சில வாரங்கள் பொறுத்து வந்தனர். என் வீட்டிற்கு எதிரிலேயே ஒரு வீடு பார்த்து குடியமர்த்தினேன். அவர்களுக்கு பெரிய நிம்மதி.*


*பின்னர் உடன் வந்திருந்த சகோதரன் பரிதோஷ் லஹிரி தானமாக தந்த சிறுநீரகம் பொறுத்தப்பட்டு சிசுதோஷ் நலமடைந்தார். சிசுதோஷ் வேலூருக்கு மாற்றலாகி வந்து பதவி உயர்வு பெற்று பெரிய அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயம் உடன் பணிபுரிந்த பொறியாளர் தோழர் ரகுநாதனோடு அரசியல் பேசி மார்க்சியத்தின் மேல் பற்று ஏற்படுத்தினார். 1998ல் லஹிரி மரணமடைந்தார்.  தோழர் ரகுநாதன் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பேராசிரியர் ஆத்ரேயாவின் ஆலோசனைப்படி டேவிட் ரியோஜெனோவின் மார்கஸ் ஏங்கெல்ஸ்  வாழ்வும் எழுத்தும்ஓர் அறிமுகம் புத்தகத்தை அபராஜிதன் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். அறிவியல் இயக்கத்தில் செயலூக்கத்துடன் செயல்பட்டார்.  எங்களோடு மூலதனம் படித்தார் முடிப்பதற்கு முன்பே 2015ல் மரணமடைந்தார்.  அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய மகன்கள்   ரகுநாதன் சேர்த்து வைத்திருந்த சிலவற்றை மட்டும் எடுத்துச்சென்றனர். மற்ற புத்தகங்களை பேராசிரியர் ஆத்ரேயா ஆலோசனைப்படி கட்சியின் மாநில அலுவலக நூலகத்துக்கு தர முன் வந்தனர். பல மாதங்கள் பொறுத்துதான் அவற்றை எடுத்து வர நேரம் கிடைத்தது. அப்படி கொண்டு வரும் போது அதில் இருந்த மூலதனம் நான்காவது வால்யூம்    புத்தகத்தை மட்டும் நான் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். பிரித்துப் பார்த்ததும் வியப்படைந்தேன். தோழர் லஹிரிக்கு அவர் பணியாற்றிய தொழிற்சங்கத்தின் தோழர்கள் தந்த புத்தகம் அவருக்குப் பின் ரகுநாதனுக்கு வந்து இப்போது என் புத்தக அலமாரியில்.*

Sunday, September 26, 2021

தோழர் கே ஜி போஸ்

 *அப்பாவின் தபால் தந்தித் துறை ஊழியர் சங்கமான NFPTE தலைவர் K G Bose சிகிச்சைக்காக சி எம் சி வந்திருந்தார். கல்லூரி விடுமுறை நாட்களானதால் அப்பா என்னை அவரோடு மருத்துவ மனைக்கு அனுப்பினார். அதுதான் என் முதல் சிஎம்சி உதவி பணி. Broken English பேச கிடைத்த முதல் வாய்ப்பு. K G Bose என்னை பெருமையாக பார்த்து மகிழ்ந்தார். அது எனக்கு உற்சாகமாக இருந்தது. அவரிடம் பேசியது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.  நான் அரசியலில் என்னமாதிரி பங்கேற்கப் போகிறேன் என்ற கேள்விதான் என்னுள் பெரிதாக உழன்று கொண்டே இருந்தது. அப்பா எனக்கு சொல்லியிருக்கும் மார்க்சிய கல்வியை, அறிவை நடை முறையில் கொண்டு வர என்னவெல்லாம் சாத்தியம் என்ற சிந்தனையும் சுற்றி சுற்றி வந்தது.*