Friday, November 20, 2020

நவம்பர் 26, 2020, அகில இந்திய வேலை நிறுத்தம்

 

அகில இந்திய நவம்பர் மாத 

வேலைநிறுத்தம்


அனைத்துப் பகுதி தொழிலாளர்

வாழ்க்கைப் போராட்டம்


ஒன்றிணைந்து போராடுவோம்

ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்



பன்னாட்டு சுரண்டல் கூட்டம்

ஒண்ணா சேர்ந்து நிக்குது

ஒட்ட சுரண்டும் திட்டம் போட

லேபர் கோடு துடிக்குது

பாடுபடும் பாட்டாளியை

உதிரியாக்க பாக்குது

ஒன்றுபட்ட போராட்டத்தை

சட்டம் போட்டு தடுக்குது

சட்டம் மீறுவோம்

தடைகள் உடைப்போம்

ஒன்றிணைந்து போராடுவோம்


எட்டு மணி வேலையை

12 மணி ஆக்குது

பாட்டாளியின் உடல்நலனை

கேலியாக பாக்குது

அடிமட்ட கூலி என்ற

புதிய சட்டம் நுழையுது

குறைந்தபட்ச கூலி யிலே

தண்ணியை ஊத்த பாக்குது

சட்டம் மீறுவோம்

தடைகள் உடைப்போம்

ஒன்றிணைந்து போராடுவோம்


சங்கம் வைக்கும் சரத்துக்களை

கிடுக்கி போட்டு முடுக்குது

சங்கம் சேரும் உரிமைக்கு

பங்கம் வைக்க பாக்குது

வேலை நிறுத்த நிபந்தனைகளை

கடுமையாக மாத்துது

கூட்டு பேர உரிமைக்கு

வேட்டு வைக்க பாக்குது

சட்டம் மீறுவோம்

தடைகள் உடைப்போம்

ஒன்றிணைந்து போராடுவோம்


புதிய பெயரில் புதிய சட்டம்

புதிய வரையறை

இருக்கும் பல உரிமைகளை தூக்கி வீசுது - இது

யாருக்கான சட்டம் என்று

தெரியுதா?

ஒட்ட சுரண்டும் சட்டம் என்று புரியுதா?

சட்டம் மீறுவோம்

தடைகள் உடைப்போம்

ஒன்றிணைந்து போராடுவோம்


அனைவருமே ஒன்றிணைய

மும்முரமாவோம்

வேலைநிறுத்தம் வெற்றிபெற

பாடுபடுவோம்

அனைத்துப் பகுதி மக்களுடைய

நலன்களைக் காக்க

ஒன்றிணைந்து நிற்பதற்கு 

சபதம் ஏற்போம்

ஒன்றிணைந்து போராடுவோம்

ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்


அகில இந்திய நவம்பர் மாத

வேலைநிறுத்தம்

அனைத்துப் பகுதி தொழிலாளர்

வாழ்க்கை போராட்டம்

ஒன்றிணைந்து போராடுவோம்

ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.


      - சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்.

Friday, November 13, 2020

பெண்ணின் மனக் குமுறல்கள்

 

செவி வழியாக பெண்ணின் மனக் குமுறல்கள்

என் பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லுவார்கள். நிறைய கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த கதை என் மனதில் ஆழ பதிந்துவிட்டது. இந்த கதை பல கேள்விகளையும் எழுப்பிவிட்டது. இந்த கதையை நான் என் மகனுக்கும் சொல்லியிருக்கிறேன். சிறிது சேர்த்தும் கோர்த்தும் சொல்லியிருக்கிறேன். இதுதான் கதை. எனக்கு என் பாட்டி சொன்னபடியே...

ஒரே ஒரு காட்டில ஒரு புலியாம். 

அந்த காட்டுக்கு ஒரு அழகான பெண் சுள்ளி பொறுக்க வந்தாளாம். 
அப்போ அந்த பெண்ணை புலி பார்த்துவிட்ட‌தாம். 
"ஆஹா இந்த பெண் எத்தனை அழகா இருக்கிறாள். இவளை கல்யாணம் செய்துகொண்டால் வாழ்க்கை பூரா சந்தோஷமா இருக்கலாமே" என்று நினைச்சதாம். 

அந்த பெண்ணின் பின்னாலேயே போச்சாம். 

அந்த பெண்ணும் சுள்ளி பொறுக்கி முடிந்ததும் வீடு நோக்கி போனாளாம். 

பெண்ணின் பின்னாலேயே புலியும் போச்சாம். 

காட்டை தாண்டி ஊருக்குள் போவதற்கு முன்னால ஊருக்கு வெளியிலேயே ஒரு வண்ணானை மிரட்டி அவனிடமிருந்து ஒரு சட்டை, வேட்டி, துண்டு எல்லாம் வாங்கி, மனுஷாளைப் போலவே வேட்டி கட்டிண்டு சட்டை போட்டுண்டு தலைப்பா கட்டிண்டு அந்த பெண்ணின் பின்னாலயே போச்சாம். 

அந்த பெண் ஊருக்குள் தன் வீடு வந்ததும் வீட்டிற்குள்ள போனாளாம். 

பின்னாலேயே போன புலி அவள் வீட்டின் திண்ணையில உக்கந்துண்டதாம். 

கொஞ்சம் நேரம் கழிச்சு அந்த பெண்ணின் அப்பா வீட்டிலிருந்து வெளியே வந்தாராம். திண்ணையில் யாரோ உட்கார்ந்திண்டு இருக்கிறதை பார்த்துட்டு " நீங்க யாரு? என்ன வேணும்?" ன்னு கேட்டராம். 

புலியும், தான் அவருடைய பெண்ணை பார்த்ததாகவும், அவளை தனக்கு ரொம்ப பிடித்துவிட்டதாகவும் அவளை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னதாம். 

இதை கேட்டதும் அந்த பெண்ணோட அப்பாக்கு ரொம்ப சந்தோஷமயிடுத்தாம். "ஆஹா அதுக்கு என்ன. பேஷா போச்சு. என் பெண்ணை உங்களுக்கு இப்பவே கல்யாணம் பண்ணி தரேன்" என்று சொல்லி பெண்ணை கல்யாணம் பண்ணி தந்துட்டாராம். 

அந்த புலியும் தன் பொண்டாட்டிய அழைச்சுண்டு காட்டுக்கு போச்சாம். ரொம்ப தூரம் நடந்து வரவே அந்த பெண்ணுக்கு தாகமாக இருந்ததாம் . 

"என்னங்க.... தண்ணி வேணும்" ன்னு கேட்டாளாம். 

ஆனா தண்ணீர் தராம "இன்னும் கொஞ்ச தூரம்தான் போயிடலாம்" ன்னு புலி சொல்லியதாம். 

இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் இந்த பெண்ணிற்கு பசி வந்துவிடுதாம். "பசிக்கிறது ஏதாவது சாப்பிட தாங்க"ன்னு கேட்டாளாம். 

இப்பவும் புலி "இன்னும் கொஞ்சம் தூரம்தான் போயிடலாம்"ன்னு சொன்னதாம். 

இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், "இன்னும் எத்தனை தூரம் போறது? பசிக்கிறது. சாப்பிட ஏதாவது தாங்க" ன்னு கேட்டாளாம். 

அப்போது அந்த புலி "சும்மா வரயா சுய ரூபத்த காட்டட்டுமா? ன்னு கேட்டதாம். 

மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி பேசவே அந்த பெண்ணும் "அது என்ன சுய ரூபம் அதையும்தான் காட்டுங்களேன். பார்த்துடலாம்" ன்னு சொன்னாளம். 

உடனே புலி தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு புர்ர்ர் என்று சீரியதாம். 

"ஐயோ ஐயோ புலி"ன்னு கத்திக்கொண்டே அந்த பெண் காட்டுக்குள்ளேயிருந்து ஓடி வீட்டுக்கு வந்து, "ஐயோ அப்பா! யார், என்னன்னு விசாரிக்காமலேயே என்ன ஒரு புலிக்கு கல்யாணம் பண்ணிதந்துட்டீங்கள்ளே" என்று அழுதாளாம். 

"ஐயோ அப்படியாம்மா" என்று அப்பாவும் அழுதாராம். 

இந்த கதையில் அம்மா எங்கே? இருந்தார்க‌ளா? இருந்தும் பேசவில்லையா? பேச முடியாத நிலையா? இல்லாமல் போனார்க‌ளா? பிரசவத்தில் இறந்து போனார்களா? பெண்ணுக்கு கிடைத்த மருத்துவ வசதி அவ்வளவுதானா? தந்தை மறுமணம் செய்து கொள்ளாமல் பெண்ணை வளர்த்தாரா? அப்படி வளர்த்தவரா பெண்ணை இப்படி பாரமாய் நினைத்து பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்? அல்லது அவர் மறுமணம் செய்துகொண்டதால் வந்த விளைவா? வீட்டில் வேறு யாருமே இல்லையா? உற்றார், உறவினர், ஊரார் யாருமே அந்த தந்தைக்கு அறிவுறுத்தவில்லையா? இந்த கேள்விகளெல்லாம் எனக்கு எப்போது வந்தன? இவற்றில் சிலவற்றையாவது பாட்டியிடம் கேட்டேனா? கதையைக் கேட்டுவிட்டு தூங்கிவிட்டேனா? 

இந்த கதை நிச்சயமாக ஒரு கதை அல்ல. என் பாட்டியோ அல்லது அவருக்கு இந்த கதையை சொன்ன அவருடைய அம்மாவோ பாட்டியோ தனக்கு நேர்ந்த‌தையோ அல்லது அவர் பார்த்து மற்றொருவருக்கு நேர்ந்தயையோதான் கதையாக கூறியிருக்கிறார். ஆக என் கேள்விகளெல்லாமே சம்பந்தமுள்ள நியாயமான கேள்விகளே. இந்த கேள்விகளெல்லாம் என் பாட்டிக்கும் வந்திருக்கும். அவர்களுக்கு கிடைத்த பதில் என்னவாய் இருந்திருக்கும்? தன் பேரனுக்கு இதனை சொல்லிவிடவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இந்த கதை செவி வழியாகவே அதற்கு உரிய முக்கியத்துவத்தோடு சொல்லப்பட்டு வந்துள்ளதாகவே நினைக்கின்றேன். 

என் மகனுக்கும் இந்த கதை நினைவில் உள்ளது. அவன் வளர வளர இந்த கதையின் ஆழம் அவனுக்கு பிடிபடும். அப்படி நேராதபடி நிலைமை மாறிடுமா? 

குழந்தையாயிருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்ட தர்மபுரி குழந்தைகள் விடாமுயற்சியோடு பள்ளிக்கு வந்து படிப்பது ஆறுதலாக இருக்கிறது. அந்த‌ குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி தொடர, நியாயம் கிடைக்க அகில உலக மகளிர் தினத்தன்று இந்த கதையை சமர்ப்பிக்கின்றேன்.

Sunday, November 8, 2020

டங்கல் திட்டம் தூளாகும்

 2010 நவம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு 1994 ‍ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று BEAT நாடக குழு தாம்பரம் சிட்லபாக்கத்திலும், சென்னை அஷோக் நகரிலும் உள்ள வங்கி ஊழியர் குடியிருப்புகளில் நடத்திய நடை பயணத்தின்போது பாடிய பாடலை சமர்ப்பணம் செய்கிறோம். 

ஆலும் வேலும் பல்லுக்குறுதி 

அவ்வை பாட்டி சொன்ன மொழி 

அதுக்குக் கூட வரி தரணும்னு 

அமெரிக்கா காரன் சொல்லுறாங்க. 

இஞ்சிக்கு மிஞ்சின மருந்தில்லைன்னு 

அம்மாஞ்சி தாத்தா சொல்வாறு 

அதுக்குக் கூட வரி தரணும்னு 

அமெரிக்கா காரன் சொல்லுறாங்க. 

மஞ்சளுன்னா மங்கலமின்னு 

மங்கையரெல்லாம் சொல்வாங்க‌ 

அதுக்குக் கூட வரி தரணும்னு 

அமெரிக்கா காரன் சொல்றாங்க. 

இந்தியாவை நாடு பிடிக்க 

டங்கல் திட்டம் போட்டாரு 

பிடிச்சா என்ன பிடிக்கடுமின்னு 

நரசிம்மராவு சொல்றாறு 

மானங்கெட்ட ஜாக்ஸன் என்று 

கட்டபொம்மன் சொன்னாறு 

எட்டப்பந்தான் என் குரு என்று 

மன்மோகன்சிங் சொல்றாறு 

கப்பலோட்டி சிறை சென்றவர் 

செக்கிழுத்த சிதம்பரம் 

பங்கு பிடித்து பணம் சேர்த்தவர் 

பாவன்னா சிதம்பரம் 

இப்படியே விட்டொமுன்னா 

நாட்டை ஏப்பம் விடுவாங்க‌ 

மக்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து 

எதிர்து நிப்போம் வாருங்க‌ 

குட்ட குட்ட குனிய மாட்டோம் 

எதிர்த்து நின்னு எட்டி உதைப்போம் 

சின்னஞ்சிறிய க்யூபாவைப்போல் 

சீறிப் பாய்வோம் வாருங்க. 

சமையலறைப் பெண்களெல்லாம் 

அரசியலைப் பாக்கணும் 

பெண்களெல்லாம் முடிவெடுத்தா 

டங்கல் திட்டம் தூளாகும் 

கிச்சிலி சம்பா பச்சரிசி 

சோறாக்கினா ஜோருங்க ‍

அதை ஒழிச்சுக் கட்ட அடி உரத்திலே 

மருந்து வச்சது யாருங்க‌? 


    ......... சி பி ரவிசங்கர்

பதின்ம வயது காதல்

"மகளிர் சிந்தனை" டிசம்பர் 2020 இதழில் வெளியாகியுள்ளது.

சும்மாதானே பாக்குறேன்

அதுக்கு ஏண்டி முறைக்கிறே

உன்னை பாக்க வந்தாக்க

விரலை காட்டி மிரட்டுற- உன்

கண்ணு ரெண்டும் கொக்கி போட்டு

பாரு பாருன்னு சொல்லுது - உன்

சிரிப்பு என்னை கட்டி போட்டு

பின்னாலயே இழுக்குது.

சும்மாதானே பாக்குறேன்

அதுக்கு ஏண்டி முறைக்கிறே

உன்னை பாக்க வந்தாக்க

விரலை காட்டி மிரட்டுற

                  

                      -சும்மாதானே


பேசி பழகி நட்பை சொல்ல

மனசு கிடந்து தவிக்குது

சுத்தும் முத்தும் கேள்வி கேட்டு 

நிக்க வுடாம துரத்துது

பார்வையால் பேசுறேன்

பாவத்தாலே சொல்லுறேன்

புரியுமுன்னு நம்புறேன்

நாளை திரும்பி வருகிறேன்.

                 

                                -சும்மாதானே


படிச்சு முடிச்சு வேலைக்கு போயி

திரும்பி வந்தா ஏத்துப்பியா

சாதி சனங்க பேச்சை கேட்டு

மவுனமாவே நிப்பியா

உனக்கும் காதல் இருக்குதுன்னு

நினைக்கிறேன் - அதை 

வெளியே சொல்ல தயங்குறேன்னு

வருந்துறேன்

உனக்கும் தவிப்பு வருமுன்னுதான்

நம்புறேன்

அது வரைக்கும் காத்திருப்பேன்

இப்போ போகிறேன் 

இப்போ போகிறேன்                  

                                 - சும்மாதானே


காதல் நெஞ்சம் பெண் மனதைப் 

போற்றிடும்

பெண்ணின் முடிவை முடிவாக 

ஏற்றிடும்

புடிக்குதுன்னா புடிக்குதுன்னு

 சொல்லிடு

காதல் வாழ்க வாழ்க என்று

முழுங்குறேன்

புடிக்கலைன்னா புடிக்கலைன்னு

சொல்லிடு

எங்கிருந்தாலும் வாழ்க என்று

வாழ்த்துறேன்


சும்மா இனியும் பாக்கமாட்டேன் பெண்ணே

சும்மா இனியும் பாக்கமாட்டேன் பெண்ணே - நீ

கண்களாலே சிரித்தாலும்

சத்தம் போட்டு சிரித்தாலும் 

சம்மதமின்றி சிரிக்கமாட்டேன் கண்ணே - உன்

சம்மதமின்றி சிரிக்கமாட்டேன் கண்ணே - உன்

சம்மதமின்றி சிரிக்கமாட்டேன் கண்ணே,


https://youtu.be/jSLwpigilkQ