Sunday, December 20, 2020

டெல்லி வீதிகளில் விவசாயிகளின் வீர நடை

*டெல்லி வீதிகளில் விவசாயிகளின் வீர நடை*


லாப வெறியும் மதவெறியும் கூட்டு சேர்ந்திருக்கு 

ஆதார உழவுத் தொழிலை விழுங்க பாக்குது 

விவசாய பெருங்குடியை வீழ்த்தப் பாக்குது

ஆட்சி கிளையில் அமர்ந்து கொண்டு

அடிமரத்தை சாய்க்குது


தொழிலாளர் தோழர் எல்லாம் அரசியலை பார்க்கணும் 

அரசியல் என்னும் மூச்சு காற்றில் மாசு கலந்திருக்கு 

நமக்கான அரசியலை கைக்கொள்ள வேண்டும் 

விவசாய நண்பனுக்கு தோள் கொடுக்க வேண்டும் 


இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுதும் இல்லை 

உழவர் வாழ்வில் கலந்திருக்கு மக்களின் வாழ்வனைத்தும் 

சூழ்ச்சியை வீழ்த்தும் பலம் உழைப்போரிடமே 

செயலூக்கம் பெறுவோம் இக்கணமே.


ஒன்றுதிரண்ட சக்தியாய் எழுவோம்

சதிகளை வீழ்த்த உறுதியாய் நிற்போம்

காலம் இடும் கட்டளையை கடமையாக ஏற்போம்

களத்தை நமதாக்குவோம் இறுகப் பற்றி நிற்போம்


ஏர் உழவன் பார்க்காத போர்க்களமா 

ஏறிநின்று சாய்க்காத ஏற்றமா 

கருத்தாக பிடுங்காத களையா

நேரத்தில் அறுக்காத அறுவடையா


போட்டு பார்க்குது சதிகார கும்பல் 

மூன்று சட்டத்தை 

போட்டுப் பார்க்குது அதிகாரத் திமிரில்

ரோடுக்கு வந்தது விவசாய படை

கலங்கி நிற்குது அதிகார படை


தண்ணீரை பாய்ச்சினால் கரைந்து போகுமோ 

தடியடி நடத்தினால் கலைந்து போகுமோ

தடிப்பிடித்த வயித்துக்கு சோறிட்டு வாழ்த்துது

தவித்த வாய்க்கு தண்ணீர் தருகுது.


பேசாமலே போட்டட சட்டம் பற்றி

பேசலாம் என்குது ஊளை சத்தம்

போட்ட சட்டத்தை வீசியெறி

பேசலாமென்குது போர்க்குரல்


பெருந்தொற்றையும் பார்க்காமல்

தீட்டிய சதிகளனைத்தும்

உலகமே பார்க்கும் வண்ணம்

வெட்ட வெளிச்சமாச்சு.


கார்ப்பரேட் கட்டளையை கைவிட மனமின்றி

கை கூப்பி கெஞ்சுது வெட்கமின்றி

நாடகம் நடத்தும் மேடையா இது

போர்க்களமாகிவிட்ட சரித்திர மேடையிது

வாழும் முடிவும் இங்கேதான்

வாழ்வை முடிக்கவுமானாலும் இங்கேதான்


திண்ணமாய் இருப்பவரின் எண்ணம்

சதிகாரன் எண்ணத்தை வீழ்த்துவது திண்ணம்

கார்ப்பரேட் அதர்மத்தை வீழ்த்த

உழவரோடு இணைவான் பாட்டாளியும்.



போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வங்கி ஊழியர் நடத்தும் காத்திருப்பு போராட்டத்தில் வாசிப்பதற்காக பெங்களூருவிலிருந்து

சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்.

Chetput Panchapakesan Ravisankar.



Monday, December 7, 2020

நாடே எழுந்து நிற்கின்றது

 நாடே எழுந்து நிற்கின்றது


டெல்லி வீதிகளில் வீர நடை போட்டு

போராட்டம் ஒன்று நடக்கின்றது - அந்த

விவசாயிகளின் போராட்டம் வெல்ல

நாடே எழுந்து நிற்கின்றது



கார்ப்பரேட் டுக்கு காவு கொடுக்கும்

மூன்று சட்டங்களை

நாடாளுமன்ற நடைமுறை மீறி

நைச்சியமாக இயற்றுவதா

விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்காமல்

மாண்டது போதாதா - இன்னும் 

நிலங்களைப் பறித்து நிர்க்கதியாக்க 

சட்டம் இயற்றுவதா

      - டெல்லி வீதிகளில்


தேர்தல் அறிக்கையை ஜூம்லா என்ற

வெட்கங்கெட்ட அரசு இது 

இந்திய நாட்டின் உணவு சுய சார்பை

அலட்சியமாக அழிக்கிறது - இனி

பொறுப்பதில்லை என வெகுண்டெழுந்து

புறப்பட்டதோர் பெரும்படை

வீரன் பகத்சிங் வாரிசுகள்

முன்கை எடுத்த படையிது

வெற்றியோடு தான் திரும்புவோமென 

ஆர்பரிக்குது டெல்லியிலே

உழுவோருக்கு 

நன்றிக் கடனாய்

நாமும் இணைவோம்

அவருடனே

ஒன்றிணைந்து போராடுவோம்

ஒன்றிணைந்தே வெல்லுவோம்

  - டெல்லி வீதிகளில்


https://youtu.be/3DDg2b0eW8M

https://youtu.be/uX9N2UOMFSg

Friday, November 20, 2020

நவம்பர் 26, 2020, அகில இந்திய வேலை நிறுத்தம்

 

அகில இந்திய நவம்பர் மாத 

வேலைநிறுத்தம்


அனைத்துப் பகுதி தொழிலாளர்

வாழ்க்கைப் போராட்டம்


ஒன்றிணைந்து போராடுவோம்

ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்



பன்னாட்டு சுரண்டல் கூட்டம்

ஒண்ணா சேர்ந்து நிக்குது

ஒட்ட சுரண்டும் திட்டம் போட

லேபர் கோடு துடிக்குது

பாடுபடும் பாட்டாளியை

உதிரியாக்க பாக்குது

ஒன்றுபட்ட போராட்டத்தை

சட்டம் போட்டு தடுக்குது

சட்டம் மீறுவோம்

தடைகள் உடைப்போம்

ஒன்றிணைந்து போராடுவோம்


எட்டு மணி வேலையை

12 மணி ஆக்குது

பாட்டாளியின் உடல்நலனை

கேலியாக பாக்குது

அடிமட்ட கூலி என்ற

புதிய சட்டம் நுழையுது

குறைந்தபட்ச கூலி யிலே

தண்ணியை ஊத்த பாக்குது

சட்டம் மீறுவோம்

தடைகள் உடைப்போம்

ஒன்றிணைந்து போராடுவோம்


சங்கம் வைக்கும் சரத்துக்களை

கிடுக்கி போட்டு முடுக்குது

சங்கம் சேரும் உரிமைக்கு

பங்கம் வைக்க பாக்குது

வேலை நிறுத்த நிபந்தனைகளை

கடுமையாக மாத்துது

கூட்டு பேர உரிமைக்கு

வேட்டு வைக்க பாக்குது

சட்டம் மீறுவோம்

தடைகள் உடைப்போம்

ஒன்றிணைந்து போராடுவோம்


புதிய பெயரில் புதிய சட்டம்

புதிய வரையறை

இருக்கும் பல உரிமைகளை தூக்கி வீசுது - இது

யாருக்கான சட்டம் என்று

தெரியுதா?

ஒட்ட சுரண்டும் சட்டம் என்று புரியுதா?

சட்டம் மீறுவோம்

தடைகள் உடைப்போம்

ஒன்றிணைந்து போராடுவோம்


அனைவருமே ஒன்றிணைய

மும்முரமாவோம்

வேலைநிறுத்தம் வெற்றிபெற

பாடுபடுவோம்

அனைத்துப் பகுதி மக்களுடைய

நலன்களைக் காக்க

ஒன்றிணைந்து நிற்பதற்கு 

சபதம் ஏற்போம்

ஒன்றிணைந்து போராடுவோம்

ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்


அகில இந்திய நவம்பர் மாத

வேலைநிறுத்தம்

அனைத்துப் பகுதி தொழிலாளர்

வாழ்க்கை போராட்டம்

ஒன்றிணைந்து போராடுவோம்

ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.


      - சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்.

Friday, November 13, 2020

பெண்ணின் மனக் குமுறல்கள்

 

செவி வழியாக பெண்ணின் மனக் குமுறல்கள்

என் பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லுவார்கள். நிறைய கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த கதை என் மனதில் ஆழ பதிந்துவிட்டது. இந்த கதை பல கேள்விகளையும் எழுப்பிவிட்டது. இந்த கதையை நான் என் மகனுக்கும் சொல்லியிருக்கிறேன். சிறிது சேர்த்தும் கோர்த்தும் சொல்லியிருக்கிறேன். இதுதான் கதை. எனக்கு என் பாட்டி சொன்னபடியே...

ஒரே ஒரு காட்டில ஒரு புலியாம். 

அந்த காட்டுக்கு ஒரு அழகான பெண் சுள்ளி பொறுக்க வந்தாளாம். 
அப்போ அந்த பெண்ணை புலி பார்த்துவிட்ட‌தாம். 
"ஆஹா இந்த பெண் எத்தனை அழகா இருக்கிறாள். இவளை கல்யாணம் செய்துகொண்டால் வாழ்க்கை பூரா சந்தோஷமா இருக்கலாமே" என்று நினைச்சதாம். 

அந்த பெண்ணின் பின்னாலேயே போச்சாம். 

அந்த பெண்ணும் சுள்ளி பொறுக்கி முடிந்ததும் வீடு நோக்கி போனாளாம். 

பெண்ணின் பின்னாலேயே புலியும் போச்சாம். 

காட்டை தாண்டி ஊருக்குள் போவதற்கு முன்னால ஊருக்கு வெளியிலேயே ஒரு வண்ணானை மிரட்டி அவனிடமிருந்து ஒரு சட்டை, வேட்டி, துண்டு எல்லாம் வாங்கி, மனுஷாளைப் போலவே வேட்டி கட்டிண்டு சட்டை போட்டுண்டு தலைப்பா கட்டிண்டு அந்த பெண்ணின் பின்னாலயே போச்சாம். 

அந்த பெண் ஊருக்குள் தன் வீடு வந்ததும் வீட்டிற்குள்ள போனாளாம். 

பின்னாலேயே போன புலி அவள் வீட்டின் திண்ணையில உக்கந்துண்டதாம். 

கொஞ்சம் நேரம் கழிச்சு அந்த பெண்ணின் அப்பா வீட்டிலிருந்து வெளியே வந்தாராம். திண்ணையில் யாரோ உட்கார்ந்திண்டு இருக்கிறதை பார்த்துட்டு " நீங்க யாரு? என்ன வேணும்?" ன்னு கேட்டராம். 

புலியும், தான் அவருடைய பெண்ணை பார்த்ததாகவும், அவளை தனக்கு ரொம்ப பிடித்துவிட்டதாகவும் அவளை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னதாம். 

இதை கேட்டதும் அந்த பெண்ணோட அப்பாக்கு ரொம்ப சந்தோஷமயிடுத்தாம். "ஆஹா அதுக்கு என்ன. பேஷா போச்சு. என் பெண்ணை உங்களுக்கு இப்பவே கல்யாணம் பண்ணி தரேன்" என்று சொல்லி பெண்ணை கல்யாணம் பண்ணி தந்துட்டாராம். 

அந்த புலியும் தன் பொண்டாட்டிய அழைச்சுண்டு காட்டுக்கு போச்சாம். ரொம்ப தூரம் நடந்து வரவே அந்த பெண்ணுக்கு தாகமாக இருந்ததாம் . 

"என்னங்க.... தண்ணி வேணும்" ன்னு கேட்டாளாம். 

ஆனா தண்ணீர் தராம "இன்னும் கொஞ்ச தூரம்தான் போயிடலாம்" ன்னு புலி சொல்லியதாம். 

இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் இந்த பெண்ணிற்கு பசி வந்துவிடுதாம். "பசிக்கிறது ஏதாவது சாப்பிட தாங்க"ன்னு கேட்டாளாம். 

இப்பவும் புலி "இன்னும் கொஞ்சம் தூரம்தான் போயிடலாம்"ன்னு சொன்னதாம். 

இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், "இன்னும் எத்தனை தூரம் போறது? பசிக்கிறது. சாப்பிட ஏதாவது தாங்க" ன்னு கேட்டாளாம். 

அப்போது அந்த புலி "சும்மா வரயா சுய ரூபத்த காட்டட்டுமா? ன்னு கேட்டதாம். 

மறுபடியும் மறுபடியும் இதே மாதிரி பேசவே அந்த பெண்ணும் "அது என்ன சுய ரூபம் அதையும்தான் காட்டுங்களேன். பார்த்துடலாம்" ன்னு சொன்னாளம். 

உடனே புலி தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு புர்ர்ர் என்று சீரியதாம். 

"ஐயோ ஐயோ புலி"ன்னு கத்திக்கொண்டே அந்த பெண் காட்டுக்குள்ளேயிருந்து ஓடி வீட்டுக்கு வந்து, "ஐயோ அப்பா! யார், என்னன்னு விசாரிக்காமலேயே என்ன ஒரு புலிக்கு கல்யாணம் பண்ணிதந்துட்டீங்கள்ளே" என்று அழுதாளாம். 

"ஐயோ அப்படியாம்மா" என்று அப்பாவும் அழுதாராம். 

இந்த கதையில் அம்மா எங்கே? இருந்தார்க‌ளா? இருந்தும் பேசவில்லையா? பேச முடியாத நிலையா? இல்லாமல் போனார்க‌ளா? பிரசவத்தில் இறந்து போனார்களா? பெண்ணுக்கு கிடைத்த மருத்துவ வசதி அவ்வளவுதானா? தந்தை மறுமணம் செய்து கொள்ளாமல் பெண்ணை வளர்த்தாரா? அப்படி வளர்த்தவரா பெண்ணை இப்படி பாரமாய் நினைத்து பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்? அல்லது அவர் மறுமணம் செய்துகொண்டதால் வந்த விளைவா? வீட்டில் வேறு யாருமே இல்லையா? உற்றார், உறவினர், ஊரார் யாருமே அந்த தந்தைக்கு அறிவுறுத்தவில்லையா? இந்த கேள்விகளெல்லாம் எனக்கு எப்போது வந்தன? இவற்றில் சிலவற்றையாவது பாட்டியிடம் கேட்டேனா? கதையைக் கேட்டுவிட்டு தூங்கிவிட்டேனா? 

இந்த கதை நிச்சயமாக ஒரு கதை அல்ல. என் பாட்டியோ அல்லது அவருக்கு இந்த கதையை சொன்ன அவருடைய அம்மாவோ பாட்டியோ தனக்கு நேர்ந்த‌தையோ அல்லது அவர் பார்த்து மற்றொருவருக்கு நேர்ந்தயையோதான் கதையாக கூறியிருக்கிறார். ஆக என் கேள்விகளெல்லாமே சம்பந்தமுள்ள நியாயமான கேள்விகளே. இந்த கேள்விகளெல்லாம் என் பாட்டிக்கும் வந்திருக்கும். அவர்களுக்கு கிடைத்த பதில் என்னவாய் இருந்திருக்கும்? தன் பேரனுக்கு இதனை சொல்லிவிடவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இந்த கதை செவி வழியாகவே அதற்கு உரிய முக்கியத்துவத்தோடு சொல்லப்பட்டு வந்துள்ளதாகவே நினைக்கின்றேன். 

என் மகனுக்கும் இந்த கதை நினைவில் உள்ளது. அவன் வளர வளர இந்த கதையின் ஆழம் அவனுக்கு பிடிபடும். அப்படி நேராதபடி நிலைமை மாறிடுமா? 

குழந்தையாயிருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்ட தர்மபுரி குழந்தைகள் விடாமுயற்சியோடு பள்ளிக்கு வந்து படிப்பது ஆறுதலாக இருக்கிறது. அந்த‌ குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி தொடர, நியாயம் கிடைக்க அகில உலக மகளிர் தினத்தன்று இந்த கதையை சமர்ப்பிக்கின்றேன்.

Sunday, November 8, 2020

டங்கல் திட்டம் தூளாகும்

 2010 நவம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு 1994 ‍ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று BEAT நாடக குழு தாம்பரம் சிட்லபாக்கத்திலும், சென்னை அஷோக் நகரிலும் உள்ள வங்கி ஊழியர் குடியிருப்புகளில் நடத்திய நடை பயணத்தின்போது பாடிய பாடலை சமர்ப்பணம் செய்கிறோம். 

ஆலும் வேலும் பல்லுக்குறுதி 

அவ்வை பாட்டி சொன்ன மொழி 

அதுக்குக் கூட வரி தரணும்னு 

அமெரிக்கா காரன் சொல்லுறாங்க. 

இஞ்சிக்கு மிஞ்சின மருந்தில்லைன்னு 

அம்மாஞ்சி தாத்தா சொல்வாறு 

அதுக்குக் கூட வரி தரணும்னு 

அமெரிக்கா காரன் சொல்லுறாங்க. 

மஞ்சளுன்னா மங்கலமின்னு 

மங்கையரெல்லாம் சொல்வாங்க‌ 

அதுக்குக் கூட வரி தரணும்னு 

அமெரிக்கா காரன் சொல்றாங்க. 

இந்தியாவை நாடு பிடிக்க 

டங்கல் திட்டம் போட்டாரு 

பிடிச்சா என்ன பிடிக்கடுமின்னு 

நரசிம்மராவு சொல்றாறு 

மானங்கெட்ட ஜாக்ஸன் என்று 

கட்டபொம்மன் சொன்னாறு 

எட்டப்பந்தான் என் குரு என்று 

மன்மோகன்சிங் சொல்றாறு 

கப்பலோட்டி சிறை சென்றவர் 

செக்கிழுத்த சிதம்பரம் 

பங்கு பிடித்து பணம் சேர்த்தவர் 

பாவன்னா சிதம்பரம் 

இப்படியே விட்டொமுன்னா 

நாட்டை ஏப்பம் விடுவாங்க‌ 

மக்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து 

எதிர்து நிப்போம் வாருங்க‌ 

குட்ட குட்ட குனிய மாட்டோம் 

எதிர்த்து நின்னு எட்டி உதைப்போம் 

சின்னஞ்சிறிய க்யூபாவைப்போல் 

சீறிப் பாய்வோம் வாருங்க. 

சமையலறைப் பெண்களெல்லாம் 

அரசியலைப் பாக்கணும் 

பெண்களெல்லாம் முடிவெடுத்தா 

டங்கல் திட்டம் தூளாகும் 

கிச்சிலி சம்பா பச்சரிசி 

சோறாக்கினா ஜோருங்க ‍

அதை ஒழிச்சுக் கட்ட அடி உரத்திலே 

மருந்து வச்சது யாருங்க‌? 


    ......... சி பி ரவிசங்கர்

பதின்ம வயது காதல்

"மகளிர் சிந்தனை" டிசம்பர் 2020 இதழில் வெளியாகியுள்ளது.

சும்மாதானே பாக்குறேன்

அதுக்கு ஏண்டி முறைக்கிறே

உன்னை பாக்க வந்தாக்க

விரலை காட்டி மிரட்டுற- உன்

கண்ணு ரெண்டும் கொக்கி போட்டு

பாரு பாருன்னு சொல்லுது - உன்

சிரிப்பு என்னை கட்டி போட்டு

பின்னாலயே இழுக்குது.

சும்மாதானே பாக்குறேன்

அதுக்கு ஏண்டி முறைக்கிறே

உன்னை பாக்க வந்தாக்க

விரலை காட்டி மிரட்டுற

                  

                      -சும்மாதானே


பேசி பழகி நட்பை சொல்ல

மனசு கிடந்து தவிக்குது

சுத்தும் முத்தும் கேள்வி கேட்டு 

நிக்க வுடாம துரத்துது

பார்வையால் பேசுறேன்

பாவத்தாலே சொல்லுறேன்

புரியுமுன்னு நம்புறேன்

நாளை திரும்பி வருகிறேன்.

                 

                                -சும்மாதானே


படிச்சு முடிச்சு வேலைக்கு போயி

திரும்பி வந்தா ஏத்துப்பியா

சாதி சனங்க பேச்சை கேட்டு

மவுனமாவே நிப்பியா

உனக்கும் காதல் இருக்குதுன்னு

நினைக்கிறேன் - அதை 

வெளியே சொல்ல தயங்குறேன்னு

வருந்துறேன்

உனக்கும் தவிப்பு வருமுன்னுதான்

நம்புறேன்

அது வரைக்கும் காத்திருப்பேன்

இப்போ போகிறேன் 

இப்போ போகிறேன்                  

                                 - சும்மாதானே


காதல் நெஞ்சம் பெண் மனதைப் 

போற்றிடும்

பெண்ணின் முடிவை முடிவாக 

ஏற்றிடும்

புடிக்குதுன்னா புடிக்குதுன்னு

 சொல்லிடு

காதல் வாழ்க வாழ்க என்று

முழுங்குறேன்

புடிக்கலைன்னா புடிக்கலைன்னு

சொல்லிடு

எங்கிருந்தாலும் வாழ்க என்று

வாழ்த்துறேன்


சும்மா இனியும் பாக்கமாட்டேன் பெண்ணே

சும்மா இனியும் பாக்கமாட்டேன் பெண்ணே - நீ

கண்களாலே சிரித்தாலும்

சத்தம் போட்டு சிரித்தாலும் 

சம்மதமின்றி சிரிக்கமாட்டேன் கண்ணே - உன்

சம்மதமின்றி சிரிக்கமாட்டேன் கண்ணே - உன்

சம்மதமின்றி சிரிக்கமாட்டேன் கண்ணே,


https://youtu.be/jSLwpigilkQ

Thursday, April 30, 2020

கேப்ரியல்


                                                               - சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்

பேங்க் கேன்டீனில் காபி குடித்தேன்,
இருக்கைக்கு திரும்பினேன்,
வேலையைத் தொடங்க முனைந்தேன்.
நண்பனிடமிருந்து கைப்பேசிஅழைப்பு.
“இப்பத்தானே கேன்டீனில் சந்தித்தோம், அதற்குள் என்ன?”
“கேப்ரியலுக்கு ஏதோ ஆயிடுத்தாம்,, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்களாம்”, நண்பன் பதட்டமா சொன்னான் “கேப்ரியல் மனைவி ராணி போன் பண்ணாங்க. நீ லீவ் சொல்லிட்டு கீழே இறங்கி வா. நாம இப்பவே போகணும்”

கேப்ரியல் எங்கள் இருவரோடும் மெடிகல் காலேஜ் கேம்பஸ் கிளையில் வேலை செய்தவன். ஸ்போர்ட்ஸ் மேன். கால் பந்துதான் வாழ்க்கை என்று இருப்பவன். கால் பந்து ரசிகர்களுக்கு கேப்ரியல் பிரியமானவன். "தே…. என்னமா கோல் போட்டான்" என்று புகழ்வார்கள். ஒரு அடி மட்ட குடும்பத்தில் பிறந்து கால் பந்தை பற்றிக்கொண்டு மேலுக்கு வந்தவன் கேப்ரியல். முதல்
தோற்றத்துக்கு அவன் உயரமும் நிறமும் அத்தனை ரசிக்கும்படி இருக்காது. நொடியில் பழகிடுவான். அவன் உருவமே மாறிவிடும். பிரியப்பட்டவனாக மனதில் அமர்ந்து கொள்வான். எப்பவுமே அவனைச் சுற்றி நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். எல்லோருடைய சுபாவத்தையும் கூர்ந்து கவனித்து அப்படியே பிரதிபலிப்பான். சம்பந்தப்பட்டவர்களே ரசிப்பார்கள். ரொம்ப கூட்டம் கூடிவிட்டால், "போங்கப்பா மேனேஜர் ஏதாவது சொல்லப்போறார்" என்று அவனே கலைத்துவிடுவான். எப்படி கேப்ரியல் இப்படி அசத்துறேன்னு கேட்டா எல்லாம் கால் பந்து சொல்லிக் கொடுத்தது என்பான்.

அவன் கேம்பஸ் கிளைக்கு மாற்றலாகி வந்தபோது அவனை ஒவ்வொருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள். என்னிடம் வந்தபோது “அண்ணே உங்களை எனக்குத் தெரியும். நிறைய சொல்லியிருக்காங்க” என்றான். திகைப்பிலாழ்த்தியபடியே அடுத்த நபரிடம் சென்றுவிட்டான். அதற்கு அப்புறம் தேநீ்ர் இடைவேளையில் அவனைத் தேடினேன். எங்கள் கேம்பஸ் கிளை ஒரு ரம்யமானது. சுற்றி அடர்ந்த மரங்களுக்கிடையே
அமைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் ஒன்றை பேங்குக்கு தந்திருந்தார்கள், இடைவேளைகளில் பக்கவாட்டு நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள மரத்தடியில் நின்று காத்து வாங்கியவாறே பேசுவது இந்த கிளையின் ருசிகரமான நடவடிக்கை. இங்கே நின்றவாறே எல்லா ஊர் கதைகளையும் பேசுவோம். அன்று நான் போவதற்குள் எல்லோரும் தேநீ்ர் அருந்திவிட்டு
இருக்கைக்கு திரும்பிவிட்டார்கள். கேப்ரியல் மட்டும் மரத்தில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.

“கேப்ரியல் என்ன யோசிச்சுகிட்டு இருக்கீங்க?”

“தெற்கு ஆசியாவில் புத்த மதம் எப்படி பரவியது? அதற்கு முன் அங்கு என்ன மதம் இருந்ததுன்னு யோசிச்சுகிட்டிருக்கேன்,” கேப்ரியல் சொன்னான்,
நான் பதில் ஏதும் சொல்லாமல் நின்றேன்.

“அண்ணே அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மாதான்” என்று திகைப்பிலிருந்து மீட்டான்.

“சரி, என்னைப் பத்தி என்ன கேள்விப் பட்டீங்க? நல்லபடியாவா, அவதூறாவா?’

“ஐயோ அண்ணே, யார் என்ன சொன்னாலும் எனக்குத் தெரியாதா? ரெயில்வே புட்பால் டீம்ல நிறைய பேர் திருச்சிகாரங்க. கம்யூனிஸ்ட் தலைவங்களைப் பத்தி ரொம்பவே சொல்லியிருக்காங்க. நான் சங்கத் திடலுக்கே போயிருக்கேன். யார் தப்பா சொன்னாலும் நம்பமாட்டேன்” என்றான்.

வாங்க போகலாம்.” நினைவுக் கோர்வையைத் தடுத்து நண்பர் அழைத்தார். இருவரும் மவுனமாகவே பஸ் நிறுத்தம் வந்து சேர்ந்தோம்.
“என்ன ஆச்சு கேபரியலுக்கு? யாருக்காவது போன் பண்ணீங்களா?”
“யாருக்கும் தெரியல. நாம நேரா போகலாம்” என்றார் நண்பர். பஸ் வந்ததும் யந்திர கதியாக ஏறி அமர்ந்தோம். நினைவுகள் கேப்ரியலைச் சுற்றி சென்றது.

கேப்ரியல் குடும்பம் சிறியது. மனைவி ராணி, இரு குழந்தைகள். மகள் பெரியவள். ராணிக்கு மெடிகல் காலேஜில் தூய்மைப் பணியாளர் வேலை. கேம்பஸிலேயே குவார்டர்ஸ். ஞாயிற்று கிழமைதோறும் ராணியும் குழந்தைகளும் கேம்பஸிலேயே இருக்கும் சர்ச்சுக்கு போவார்கள். பைபிளை அணைத்தபடியே ராணி முன்னே நடக்க குழந்தைகள் பின்னாலேயே செல்வார்கள். கேப்ரியல் போகமாட்டான். “கடவுள் இருக்காரா இல்லையா என்று நான் யோசிக்கமாட்டேன். எனக்கு தெரிந்ததெல்லாம் புட்பால்தான். அதைப்பத்தி மட்டும்தான் யோசிப்பேன். சின்னப் பையனா இருந்தபோது எங்க வீட்டுக்கு அருகே ஒரு புட்பால் ப்ளேயர் இருந்தார். டேய் கேப்ரியல் ஏதாவது ஒரு விளையாட்டை அர்ப்பணிப்போடு கத்துக்க. விளையாடு. அது
உனக்கு மீதியையெல்லாம் கத்துக்கொடுக்கும்னாரு. அதை மெய்யா நம்பி இன்னைக்கு வரைக்கும் புட்பால் மட்டும்தான் என் கவனமெல்லாம். விளையாட்டில் கத்துகிட்ட ஒழுங்கு எனக்கு வாழ்க்கைக்கும் உதவுது” என்பான்.

எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தைக் கூட கேப்ரியல் எப்படிச் சொல்றான்னு கேட்க எல்லோருக்கும் ஆவல்.

“ஈராக்குல ஆயுதம் இல்லைன்னு தெரிந்துதான் அமெரிக்காகாரன் தாக்கினான். வட கொரியாவைத் தாக்கச் சொல்லுங்க பாப்பம்”

“எப்படி கேப்ரியல், இவ்வளவு அனாயாசமா பேசற?”

“நீங்க வேற அண்ணே. அப்பப்ப தலைப்பு செய்தி மட்டும் படிப்பேன், சில செய்திகளின் அறிமுக பாரா படிப்பேன். யாராவது பேசும்போது அதைப்பத்தி மனசுல தோன்றதைப் பேசுவேன். அவ்வளவுதான்.”

இதெல்லாம் வக்கணையா பேசறவனுக்கு பேங்க் வேலை மட்டும் கை வரவேயில்லை.
"கையெழுத்து மோசமா இருக்கு. கிறுக்கறான்”னு டெஸ்பேச் ஹெட்கிளார்க் எப்பவும் புகார் சொல்லிகிட்டே இருப்பார்.
"பேங்க் என் காலைப் பார்த்துதான் வேலை கொடுத்தது. கையைப்பார்த்து இல்லைன்"னு கேப்ரியல் சொன்னதைக் கேட்டு ஆபீஸே குலுங்கி குலுங்கி சிரித்தது. அதுக்கப்புறத்திலிருந்து கேப்ரியலுக்கு நிரந்திரமா பாஸ் புக் பிரிண்டிங் வேலைதான்.

ஸ் கேம்பஸ் நிறுத்தத்தில் நின்றது. இறங்கி கேம்பஸுக்குள் இரண்டு கிலோ மீட்டர் நடக்கணும். கேம்பஸ் முழுதுமே அடர்ந்த மரம். உள்ளே நுழைந்ததுமே வெப்பம் இரண்டு டிகிரி குறைவதை நல்லா உணரமுடியும். சற்று வேகமாகவே நடக்கத் தொடங்கினோம்.

கேப்ரியலோடுப் பேசிப்பேசி என்னை அவனுடைய மனசாட்சியாவே ஆக்கிட்டான். அவன் சிகரெட் பிடிப்பதைப் பத்தியும், அவ்வப்போது குடிப்பதைப் பத்தியும் கேட்டுவிட்டேன்.

 “ஏன் கேப்ரியல் புகையிலையும் மதுவும் ஆரோக்கிய கேடு இல்லையா? ஒரு ஸ்போர்ட்ஸ் மேனா இவை ரெண்டையும் விட்டுவிடேன்.”

“சரிண்ணே சரிண்ணே” தலையை ஆட்டி கேட்டுகிட்டான். பிறகு போகவிட்டு கூப்பிட்டு “அண்ணே, பாத்துண்ணே ரோட்டுல லாரி பஸ் தாறு மாறா போகுது. இன்னும் நிறைய குடும்பங்களுக்கு உங்க சேவை தேவை அண்ணே”

இவன் பழி வாங்குறானா, சேவை செய்ய உற்சாகப்படுத்துறானா?

இதை சரி கட்டுறமாதிரி மறு நாள் பேசினான். “அண்ணே சம்பள பணத்தை அப்படியே ராணிகிட்ட கொடுத்துடுவேண்ணே. அவளா பாத்து புகையிலைக்கும் சோம பானத்துக்கும் கொஞ்சம் தருவா.. அவ்வளவுதாண்ணே”

மீண்டும் அவனுடைய மனசாட்சியாகும் தைரியம் வந்துவிட்டது. “அந்த மெயின் பிராஞ்ச் யமுனாவை உன்னோடு சேத்து பேசறாங்களே….”

“அண்ணே பாவம்ணே. ஆறு பொண்ணுங்க. இவ நாலாவது. ரொம்ப நாளு யோசனை பண்ணிட்டுத்தான் எங்கிட்டே கேட்டா.. நானும் பதிலே சொல்லாமதான் இருந்தேன். பக்கத்து சீட். தினம் அவ மவுனமாவே என்னை பாக்குற போதெல்லாம் ரொம்ப சங்கடமாவே இருந்துச்சு. அவ என் கிட்டே வேறே எதுவும் எதிர்பாக்கல. நானும் எதுவும் எதிர் பாக்கமாட்டேன்னு தெரிஞ்சுதாண்ணே எங்கிட்டே கேட்டா… கல்யாணம் ஆனவன் பேசற
பேச்சான்னு கேக்குறது புரியுது. உதவின்னு செய்யறதை ராணியும் புரிஞ்சுக்குவா.. என்னைப் பத்தி ராணிக்கு நல்லா தெரியும். எந்த நிலையிலும் ராணிக்கும் புள்ளைங்களுக்கும் எந்த குறையும் வைக்க மாட்டேன். புட் பால், பேங்க், ராணி, புள்ளைங்க யாருக்கும் நன்றி
மறக்கமாட்டேன் அண்ணே. அப்படி மறந்தா அன்னைக்கு கேப்ரியல் செத்துட்டான்னு நினைச்சுக்க அண்ணே”

அதுக்கப்புறம் நான் மாற்றலாகி மெயின் கிளைக்கு வந்துவிட்டேன். கேப்ரியலைப் பற்றி கேட்கும்போது கிரிக்கட் பெட்டிங்லாம் செய்யறான்னு கேள்விப் பட்டேன்.

கேப்ரியல் வீட்டருகில் வந்துவிட்டோம். பேங்க் ஸ்டாபுங்க ரெண்டு மூணு பேர் வேகமாஎங்களை நோக்கி வந்தாங்க. “கேப்ரியல் தூக்கு போட்டு செத்துட்டார்.. “ ஒருத்தரை மாத்தி ஒருத்தர் சொன்னாங்க “இன்னிக்கு காலை 9 மணிக்கே கேப்ரியல் பிராஞ்சுக்கு வந்து வெளியவே நின்னுகிட்டு, ஸ்வீப்பரை கூப்பிட்டு கிளியரிங் செக் பண்டிலை எடுத்து கொண்டு
வான்னு சொல்லியிருக்கார். ஸ்வீப்பர் எடுக்கப் போகும்போது மேனேஜர் பாத்துட்டார். கேப்ரியல்தான் எடுத்துட்டு வரச்சொன்னாருன்னு ஸ்வீப்பர் சொல்ல, மேனேஜர் வெளியே வந்து எட்டிப் பார்த்ததும் கேப்ரியல் சைக்கிளில் வேகமா வீட்டுக்கு வந்திருக்காரு. வீட்டிலே யாரும் இல்ல, தூக்கு மாட்டிகிட்டு தொங்கிட்டாரு..” ”பின்னாலெயே பாங்க் ஸ்டாபுங்க வீட்டாண்ட வந்தாங்க. அதுக்குள்ளயும் இறந்துட்டாரு...” “கணக்குமுடிச்சு கஸ்டமர் சரண்டர் பண்ண செக்கில இவரு கையெழுத்துப் போட்டு லோன் பார்ட்டிக்கு
கொடுத்திருக்காரு.”

பாவி இப்படி பண்ணிட்டானே.. கேப்ரியல் வீட்டை நோக்கிப் போனோம். “பாடி போஸ்மார்ட்டத்துக்கு போயிடுச்சு, வர்ரதுக்கு சாய்ங்காலம் ஆயிடும்” வெளியிலேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தோம். ராணி உள்ளே அழுது கொண்டிருந்தாள். அருகே குழந்தைகள் என்னவென்றே தெரியாமல் அமர்ந்திருந்தனர். யமுனா சற்று தள்ளி நின்று புடவை தலைப்பால வாயைப் பொத்தி அழுது கொண்டிருந்தாள். உள்ளே சென்று ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பினோம்.

புட்பால் கற்றுக் கொடுத்த திறமையை கிரிக்கெட் பெட்டிங்கில் காட்டியிருக்கான். பெட்டிங் என்பது பெட்டிங், விளையாட்டில்லை என்பது ஏன் அவனுக்கு தெரியாமல் போனது?

“ராணிக்கு வேலை கிடைக்குமா?” நண்பர் கேட்டார்.

“இப்பல்லாம் கொடுக்கிறதில்லையே” என்றேன்.

யமுனா பாத்துக்குவாள் என்று கேப்ரியலின் மன சாட்சி சொன்னது.


https://bookday.co.in/gabriel-chetpet-panjapakesan-ravishankar-short-story/

Book Day 6th May, 2020

Wednesday, April 1, 2020

மக்கள் ஒற்றுமை வெல்லும்.




ஜனநாயகம் செம்மைப் படுத்தப் படவேண்டும்.

கோளாறுகள் நீக்கப்படவேண்டும்.

நடைமுறையில் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன.

மதச் சார்பின்மைக்கு கேடு விளைவிக்கும் சக்திகள்
ஊக்கம் பெறுகின்றன.


ஒரு மாநிலத்தில் மீண்டும் மீண்டும் தவறு நிகழ்ந்திருக்கிறது.

அதுவே மத்தியில் பரவி மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.

தவறின் விளைவுகளே சந்தித்துக்கொண்டிருக்கும் சிரமங்கள்.


அட்லியின் அடிவயிற்றை கலக்கி,

தல்வார் கப்பலில் பட்டொளி வீசிப் பறந்த

மூவர்ணக் கொடியைப் பார்த்து,

செங்கொடியைப் பார்த்து,

பச்சைக் கொடியைப் பார்த்து

ஏகாதிபத்தியத்தின் காலடியில் விழுந்து கிடந்த
காவிக்கொடி கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


தியாகத்தைப் பார்த்து

துரோகம் கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தத்தைப் பார்த்து

ஏகாதிபத்திய கொழுப்பெடுத்த ரத்தம் கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


காந்தியைப் பார்த்து,

பகத்சிங்கைப் பார்த்து,

முசாபர் அகமதுவைப் பார்த்து,

சிங்காரவேலரைப் பார்த்து,

நேதாஜியைப் பார்த்து

கோல்வால்கரும் சாவர்க்கரும் கேட்கிறார்கள்

உன் குடியுரிமையை நிரூபி என்று.


பெரியாரைப் பார்த்து,

அம்பேத்கரைப் பார்த்து,

பி ராமமூர்த்தியைப் பார்த்து,

சீனிவாச ராவைப் பார்த்து

கோல்வால்கரும் சாவர்க்கரும் கேட்கிறார்கள்

உன் குடியுரிமையை நிரூபி என்று.


பொதுவுடைமையை பார்த்து

தனி உடைமை கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


உழைப்பாளியின் வியர்வையைப் பார்த்து

சுரண்டிக் கொழுத்த கார்ப்பரேட் ரத்தம் கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


மக்கள் ஒற்றுமையை பார்த்து,
 மதநல்லிணக்கத்தை பார்த்து,

வேற்றுமையில் ஒற்றுமையை பார்த்து

மதவெறி கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.


கூட்டாட்சியை பார்த்து

ஒற்றை ஆட்சி கேட்கிறது

உன் குடியுரிமையை நிரூபி என்று.



ஜமியா மிலியாவில்
ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தாள்

ஒரு வீராங்கனை.

நடுங்கிய துப்பாக்கி பின்வாங்கியது.

அந்த ஒற்றை விரல் காட்டிய உறுதி

இன்று நாடு முழுவதும் ஷாகின்பாக்குகள்.

அந்த விரல் எழுதிய கவிதைகளாய்
 
ஷாகின்பாக்கின் பெண்மணிகள்.


உயிரினும் மேலானது குடியுரிமை.

ஒருபோதும் அனுமதியோம் மதவெறி கொடுமை.

மதவெறியை நிலைகுலையச் செய்யும் மக்கள் ஒற்றுமை.

தருணத்திற்காக காத்திருக்கிறது மக்களின் பொறுமை.

போராட்ட வரலாற்றில் மற்றொரு பெருமை.

ஷாகின்பாக்குகள் படைக்கின்றன, இது உண்மை.