Thursday, October 7, 2021

எப்போதிலிருந்து கம்யூனிஸ்டு

 *இன்னும் இரு மாதங்களில் கட்சியில் இணைந்து ஐம்பது வருடங்கள் முடிந்து விடும்.*


*உறுப்பினராக ஐம்பது வருடங்கள் என்றாலும் கட்சியுடன் ஆன பிணைப்பு எப்போதிலிருந்து?*


*நான் ஒன்பது வயது சிறுவனாக தொடர்பிலிருந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் கம்யூனிஸ் கட்சி. பெரிய வடிவத்தில் உயர் ரக தாளில் மனம் கவரும் வண்ண புகைப் படங்களுடன் மகிழ்ச்சியூட்டும் தஙவல்களுடன் வந்து கொண்டிருந்த சோவியத் லேண்ட் பத்திரிக்கையின் மூலம்... மனிதன் விண்வெளியில் உலகை வலம் வந்த செய்திகளை ஆர்வமுடன் படிப்பேன். என் வகுப்பு குழுவுக்கு பெயர் வைக்க ஆலோசனை கேட்ட போது யூரி காகரின், வாலண்டினா தெரஸ்கோவா என் று முதல் விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனையின் பெயரைச் சொன்னேன். வகுப்பாசிரியரின் புருவம் உயர்ந்தது.* 


*சோவியத் லாண்டில் வரும் பாலே நடனம், இசை நிகழ்ச்சிகளைத் பற்றிய செய்திகளை நான் விரும்பிப் படிப்பேன். உஸ்பெக்கிஸ்தான் இளம் பெண் ஒருவள் பாவனையோடு பாடும் படம் ஒன்று வெளியாகியிருந்தது. ஒரு இளைஞன் பின்னால் நின்று கொண்டு புல்லாங் குழல் வாசித்துக் கொண்டிருந்தான். அந்தப் படம் என்னை வெகுவாக கவர்ந்தது. பத்து பதினைந்து வருடங்கள் அந்த புகைப்படத்தை பாதுகாப்பாக வைத்திருந்தேன். அவ்வப்போது பார்ப்பேன். ஒரு உஸ்பெக்கிஸ்தான் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூட எண்ணியதுண்டு. புல்லாங்குழல் கூட வாசித்து பழகினேன்.*


*பன்னிரண்டு வயதில் வீட்டருகில் குடிசைத் தொழிலாக நடைபெறும் பீடி சுற்றும் கூடத்தில் அமர்ந்து ஜனசக்தி படித்துக் காட்டுவேன். தலைப்புச் செய்திகளையும் அறிமுக பாராக்களையும் முதலில் படிப்பேன். பின்னர் நேயர் விருப்பம் போல தொழிலாளர்கள் கேட்கும் செய்திகளை படிப்பேன். பள்ளியிலிருந்து வரும்போதே அழைப்பார்கள். தினமும் குறைந்தது அரை மணி நேரம்  படித்துக் காட்டுவேன். இது இந்திய கம்யூனிஸ்டு கட்சியினுடனான தொடர்பின் ஆரம்பம்.*


*முதல் கட்சி நடவடிக்கை எப்போது?.*


*1962ல் என்னுடைய பதி மூன்றாவது வயதில் கம்யூனிஸ்டு கட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு சிறுவர்களை சேர்த்துக் கொண்டு, யாருக்கையா ஓட்டு என்று மூன்று நான்கு வீதிகளில் வலம் வந்ததுதான் முதல் கட்சி நடவடிக்கை. பீடித் தொழிலாளர்கள் உடனிருந்து உற்சாகப்படுத்தினர். பாராளுமன்ற அபேட்சகர் ராஜரத்தினம் எம் ஏ பி எல் லுக்கும் சட்ட சபை அபேட்சகர் கே ஆர் சுந்தரத்துக்கும் கதிர் அரிவாள் சின்னத்தில் மறவாமல் ஓட்டுப் போடுங்கள் என்று பேசியதுதான் முதல் அரசியல் உரை.*


*பின்னர் கல்லூரி படிக்கும்போது தீக்கதிர் வார இதழ் விநியோகமப் பணி முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடவடிக்கை. நான் விநியோகித்து தீக்கதிர் வாசித்தவர்கள் சைதாப் பேட்டையில் தோழர் வி என் ராகவன் (தபால் துறையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏழு வருடங்கள் தீக்கதிரில் பணி புரிந்தவர்), ஓல்டு டவுனில் தோழர் கங்காதரன் (அப்போது ரெவின்யூ துறையின் தொழிற்சங்கம், பின்னர் அரசு ஊழியர் சங்கம்), சாயிநாதபுரத்தில் தோழர் ஜெகதீசன் ஏஐஐஇஏ. இந்த எட்டு கிலோ மீட்டர் வழிப் பாதையில் பத்து பதினைந்து தோழர்களுக்கும் விநியோகம்.*

Sunday, October 3, 2021

ஸ்டேட் பேங்க் தொழிற்சங்கத்தில்...

 *நான் ஸ்டேட் பேங்கில் கமுக்கமாக இருந்தேனா?*


*"நீ வேலை செய்யுமிடத்தில் நீ சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடாமல் என்ன வர்க்கம் போராட்டம் நடத்தப் போகிறாய்?" தொழில் புரியும் வங்கிக் கட்சிக் கிளையில் உறுப்பினராக இல்லாமல் வசிக்குமிடத்தில் கட்சி உறுப்பினர்களாக செயலாற்றுபவர்களைப் பற்றி குறிப்பிட்டு தோழர் பி டி ரணதிவே கேட்பார்.*


*1969, முதல் இருதரப்பு ஒப்பந்தம் காலத்தில் வங்கிப் பணியில் சேர்ந்தேன். 1/1/1970 முதல் இரண்டாம் இருதரப்பு ஒப்பந்தம். இதனை விளக்கி வெற்றி கூட்டமாக நான் படித்த கல்லூரி கேலரி அறையில் SBSU கூட்டம். மாசிலாமணி தான் அப்போது பொதுச் செயலாளர். Area abolitionல் மூன்றாவது ஏரியாவுக்கு நியாயம் மறுக்கப்பட்டள்ளதை பற்றி கேட்டேன். "ஒரு வருடம் கூட சர்வீஸ் இல்ல. இவ்வளவு பேருக்கு எழாத கேள்வி உங்களுக்கு எப்படி?" என்று பதில்.* 


*ஸ்டேட் பேங்கில் probationக்கு பிறகு மூன்று வருட சர்வீஸ் முடிந்தால் வீட்டுக் கடன் உண்டு. ஆனால் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலமாகத்தான். அதற்கான வேலைகளை தொடங்க முயற்சித்தேன். அதுமட்டுமில்லாமல் கிளைத் தேர்தலில் நானும் இன்னொரு கேஷியரும் வேட்பு மனு தாக்கல் செய்தோம்.வேலூரில் சிஎம்சி எதிரில் துவங்க இருந்த கிளைக்கு நாங்கள் இருவரும் மாற்றப் பட்டதாக கடிதம் தரப்பட்டு, ஆகவே எங்களின் வேட்பு மனு ரத்தாகி விட்டதாக அறிவிப்பு பலகை கூறியது. அந்த கிளைக்கென்று  வெளி ஊரிலிருந்து இருவர் எங்கள் கிளையில் காத்திருப்பில் இருப்பதை சுட்டிக் காட்டி கேட்டதுதான் மிச்சம். ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை என்ற அதிகாரப்பூர்வமற்ற ஏற்பாடு ஒன்று நடைமுறையில் இருந்ததால் உடன் பணி புரிவோர் தங்கள் இயலாமையை எங்களை கேலி செய்வதன் மூலம் திரையிட்டுக் கொண்டனர்.*

நகர தொழிற்சங்க பணிகளில்

 *தோழர் பரமசிவம் என் அப்பாவால் கவரப்பட்டு அற்பணிப்போடு இயக்கப் பணியாற்றும் தோழர். தொலை பேசி துறை. அவர்  எல்லோரையும் பிரதர் என்று அழைத்ததால் அவருக்கு அதுவே செல்லப் பெயராகிவிட்டது.*


*தோழர் K G Bose என்ன சொன்னார் என்ற உரையாடலோடு தொடங்கி என்னை நகர தொழிற்சங்க பணிகளில் ஈடுபடுத்திவிட்டார். மே தினம், Central State Public Sector Convention, City Trade Union Council என்று அனைத்திலும் நடை பெறும் நிகழ்வுகளுக்கான தயாரிப்புக் கூட்டத்தில் அமர்ந்து முடிவுகளை குறிப்பெடுப்பது, ஹால், மைக், அழைப்பிதழ், போஸ்டர்,நினைவூட்டல், வரைவு தீர்மானம் என்று அனைத்து பணிகளிலும் என்னை ஈடுபடுத்தி விடுவார்.*


*என்னுடன் படித்த நண்பர்களில் கணிசமான எண்ணிக்கையினர் பட்டதாரி ஆசிரியர்கள். அவர்களில் சிலர் சங்க நிர்வாகிகள். அவர்களின் தொழிற்சங்கம் போராட்ட அறை கூவல் விடுத்தது. ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டங்களில் நகரின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் வாழ்த்தி பேச ஏற்பாடு செய்ய உதவியாய் இருந்தேன். கோஷம் எழுப்ப, வீதியில் இறங்கி போராட அவர்களுக்கு இருந்த தயக்கத்தை உடைத்தேன்.*


*ஒரு நாள் ஒரு சிஐடி போலீஸ் காசோலைக்கு பணம் பெற வங்கிக்கு வந்திருந்தார். என்னை கேஷ் கவுண்டரில் பார்த்துவிட்டு வியப் படைந்தார். "நீங்க கம்யூனிஸ்டுன்னு தெரியும். சிஎம்சியில் வேலை பார்ப்பவர் என நினைத்தேன். பின்னர் எல்ஐசி ஊழியர் என நினைத்தேன். பின்னர் ரெயில்வே, தொலை பேசி ஊழியர் அல்லது ஆசிரியர் என் எண்ணினேன். பார்த்தால் ஸ்டேட் பேங்குல கமுக்கமாக உக்காந்து கிட்டு இருக்கீங்க" என்று வியப்புடன் கேட்டார்*